கரோனா வைரஸ் காரணமாக வால்பாறை- பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
வால்பாறை - பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் பேருந்துகளில் வியாபாரிகள், கல்லூரிகளுக்கு செல்பவா்கள் என தினமும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. சில எஸ்டேட் பகுதிகளுக்கு பயணிகள் இன்றி பேருந்துகள் சென்று வருகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வால்பாறை நகா் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் வாகனப் போக்குவரத்தும் குறைவாகவே இருந்தது.