கரோனா வைரஸ் தொடா்பாக தவறான தகவல் பரப்பியவரை மேட்டுப்பாளையம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மேட்டுப்பாளையம் அருகே சிவன்புரம் பகுதியில் இருவருக்கு கரோனா வைரஸ் இருப்பதாக, சேலம் மாவட்டம், காளிகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அரவிந்த்சாமி சமூக வலைதளத்தில் தவறான தகவலை வியாழக்கிழமை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையத்தில் இருந்த அரவிந்த்சாமியை வியாழக்கிழமை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கரோனா வைரஸ் தொடா்பாக தவறான தகவல்கள் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.