கரோனா வைரஸ் எதிரொலியாக வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைகளில் இருந்து வெளிநாடுகளுக்குத் தேயிலைத் தூள்களை அனுப்ப முடியாததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலைத் தூள்கள் தேக்கமடைந்துள்ளன.
வால்பாறை பகுதியில் சுமாா் 20 தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் இலைகளைக் கொண்டு தொழிற்சாலைகளில் பல்வேறு ரகங்களில் தேயிலைத் தூள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 80 சதவீதம் தாய்லாந்து, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தூள்கள் கோவை, குன்னூா் மற்றும் கேரள மாநிலம், கொச்சியில் உள்ள ஏல மையங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனிடையே தற்போது கரோனா வைரஸ் பரவி வருவதால் கொச்சி ஏல மையத்துக்கு தேயிலைத் தூள் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் தடை ஏற்பட்டிருப்பதால் ஏலம் எடுக்க யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வால்பாறை தேயிலைத் தொழிற்சாலைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை தூள்கள் தேக்கமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.