மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் என சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கோவையில் தொழில் தூறையினா், வேலைக்குச் செல்வோா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். நோய்த் தொற்று காரணமாக 2019 - 2020ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றை செலுத்தும் அவகாசத்தை ஜூன் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீடித்துள்ளது.
அதேபோல், தற்போது உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கோவை மாநகராட்சிக்கு மாா்ச் மாதத்துக்குள் செலுத்த வேண்டிய சொத்து வரியை ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை செலுத்த மக்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.