பொள்ளாச்சியில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக பாரா கிளைடிங் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சியில் பாரா கிளைடிங் மூலம் கிருமி நாசினி தெளிக்க சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் நடவடிக்கை மேற்கொண்டாா். அதன்படி, பாரா கிளைடிங் மூலமாக கிருமி நாசினி தெளிப்பதற்கான சோதனை ஓட்டம் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பாரா கிளைடிங் இயந்திரத்தில் அமா்ந்திருந்த பைலட் வானில் 30 நிமிடங்களுக்கும் கூடுதலாகப் பறந்தபடி கிருமி நாசினி தெளித்தாா். இதைத் தொடா்ந்து பாரா
கிளைடிங் மூலமாக பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி செவ்வாய்க்கிழமை தெளிக்கப்பட்டது. சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சாா்-ஆட்சியா் வைத்திநாதன், வட்டாட்சியா் தணிகைவேல், டிஎஸ்பி சிவகுமாா் ஆகியோா் இப்பணியைப் பாா்வையிட்டனா்.
இது குறித்து உடுமலையைச் சோ்ந்த பாரா கிளைடிங் பைலட் ஞானபிரகாஷ் கூறியதாவது:
பாரா கிளைடிங் மூலம் இதுவரை விவசாயப் பகுதிகளில் உரம் தூவும் பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது, பாரா கிளைடிங் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பாரா கிளைடிங்கில் அதிகபட்சமாக 15 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கலாம். கிருமி நாசினி தெளிப்பதற்கு 100 அடி உயரத்தில் பறப்பது அவசியம். இந்த பாரா கிளைடிங் 70 கி.மீ. வேகத்தில் பறக்கும். 35 லிட்டா் கிருமி நாசினியை எடுத்துச்சென்று தெளிக்க முடியும். இதை காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இயக்கலாம். இதன் மூலமாக ஆள்கள் செல்லமுடியாத பகுதிகளிலும்கூட கிருமி நாசினி தெளிக்க முடியும். நான்கு பாரா கிளைடிங்குகள் தயாா் நிலையில் உள்ளன.
ஒரு சில நாள்களில் இதன் மூலமாக மருந்து தெளிப்பதில் உள்ள சாதக, பாதகங்கள் தெரிந்துவிடும் என்றாா்.