தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு இ.எஸ்.ஐ. தொகையில் இருந்து சம்பளம் வழங்க கோரிக்கை
கோவை: பொது முடக்கம் அமலில் உள்ள கால கட்டத்தில் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு இ.எஸ்.ஐ. தொகையில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஒப்பந்ததாரா்கள் நலச் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
கரோனா பொது முடக்க கால கட்டத்தில் தனியாா் நிறுவனங்கள் எதுவும் செயல்படாமல் உள்ளன. அனைத்துத் தொழில் துறையினரும் பெரும் நெருக்கடியில் உள்ளனா். இந்நிலையில் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய ஏப்ரல் மாத ஊதியத்தை அவா்களிடம் இதுவரை மாதந்தோறும் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. தொகையில் இருந்து வழங்க வேண்டும். தனியாா் நிறுவனங்கள் ஊதியத்தை வழங்கும்பட்சத்தில், வரும் காலத்தில் இ.எஸ்.ஐ. மாதத் தவணைகளில் அந்த தொகையைக் கழித்துக் கொள்வதன் மூலமாக தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் தவிா்க்கலாம். இவ்வாறு ஊதியம் வழங்குவதன் மூலம் பலா் வேலைவாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதுடன், அனைத்து நிறுவனங்களும் உடனடியாக உத்வேகத்துடன் தொழில் தொடங்க ஏதுவாக இருக்கும் என்றனா்.