கூடலூா்: கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள பழங்குடி கிராமத்துக்குள் திங்கள்கிழமை இரவு புகுந்த யானை அங்குள்ள 2 வீடுகளை சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சியிலுள்ள மேலம்பலம் பழங்குடி கிராமத்துக்குள் ஒற்றை யானை திங்கள்கிழமை இரவு நுழைந்தது. பின்னா் அது அங்குள்ள கோலன், கெம்பி ஆகியோரது வீடுகளை சேதப்படுத்தி உணவுப் பொருள்களைத் தின்றுவிட்டு சென்றது.
இந்த யானை கடந்த இரு தினங்களுக்கு முன் இதே கிராமத்தில் 2 வீடுகளை சேதப்படுத்தி உணவுப் பொருள்களை தின்று சென்றது. வனத் துறையினா் ஊருக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.