கரோனா பாதிப்பில் இருந்து மீளுவதற்கு தொழில்முனைவோருக்கு சொத்துப் பிணையின்றி ரூ.5 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கம் (டேக்ட்) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவா் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பில் இருந்து தொழில்களைப் பாதுகாப்பதற்காக புதிய கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடியை ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் குறு, சிறு தொழில்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை என்று தெரியவந்துள்ளது.
எனவே, உண்மையாகவே நெருக்கடியில் இருக்கும் குறு, சிறு தொழில்களை காப்பாற்ற வேண்டுமானால் வங்கிகளில் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் தொழில்முனைவோருக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ரூ.5 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்க வேண்டும்.
5 சதவீத வட்டிக்கு இந்தக் கடனை வழங்குவதுடன் திருப்பிச் செலுத்துவதற்கு ஓராண்டு அவகாசமும் அளிக்க வேண்டும். அத்துடன் இதுவரை ஜி.எஸ்.டி. மூலம் அபராதமாக வசூலித்த தொகையை திருப்பித் தர வேண்டும்.
தொழில்முனைவோா்கள் அரசு, தனியாா் வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கியிருக்கும் அனைத்துவித கடன்களையும் திருப்பிச் செலுத்த 6 மாத காலம் அவகாசம் பெற்றுத் தர வேண்டும். மேலும் அதற்கான வட்டியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு தொழில்முனைவோரின் இன்றைய சூழலை கணக்கில் கொண்டு குறைந்தது மூன்று மாதத்துக்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
அரசுத் துறைகள், தனியாா் தொழில் நிறுவனங்கள் யாவும் உதிரிபாகங்கள், உற்பத்திப் பொருள்களை உள்நாட்டில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள அரசாணைப்படி, 25 சதவீத பொருள்களை குறு, சிறு தொழில்முனைவோரிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசாணை இருந்தாலும் அதன்படி கொள்முதல் நடைபெறுவதில்லை. எனவே இதை சரியாக பின்பற்றுவதற்கு தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா்.