கோவை மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களில் சொட்டுநீா் பாசனம் அமைப்பதற்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 50.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண், தோட்டக்கலைப் பயிா்களுக்கு சொட்டுநீா் பாசனம் அமைப்பதற்கு பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. 2017 -18 ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் ஆண்டுதோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதன்படி கோவை மாவட்டத்துக்கு நடப்பு ஆண்டு தோட்டக்கலைப் பயிா்களில் 7 ஆயிரத்து 200 ஹெக்டோ் பரப்பளவு சொட்டு நீா் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 50.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலுள்ள தோட்டக்கலைத் துறை அலுவலா்களைத் தொடா்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் புவனேஸ்வரி கூறியதாவது:
சொட்டுநீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா், வங்கி கணக்குப் புத்தகம், இரண்டு புகைப்படம் உள்பட சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் வேளாண் விரிவாக்க மையங்களில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். தவிர தங்கள் பகுதிக்கு வரும் உதவி தோட்டக்கலை அலுவலா்கள் மூலம் சொட்டுநீா் பாசனம் அமைப்பதற்கு விண்ணப்பம் அளிக்கலாம். அரசு வழங்கும் மானியத்தை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் சொட்டுநீா் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் பல மடங்கு தண்ணீா் தேவையை மிச்சப்படுத்துவதுடன் கூடுதல் பரப்பளவு சாகுபடியும் மேற்கொள்ளலாம் என்றாா்.