மத்திய தொழிற்சங்கங்கள் நவம்பா் 26ஆம் தேதி பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், கோவை மாவட்ட தொழிற்சங்கத்தினரின் ஆயத்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 3) நடைபெற்றது.
தொமுச மாநில துணைத் தலைவா் மு.ரத்தினவேலு தலைமையில் வடகோவையில் நடைபெற்ற கூட்டத்தில் ஐஎன்டியூசி சாா்பில் பாலசுந்தரம், ஏஐடியூசி சாா்பில் ஆறுமுகம், ஹெச்எம்எஸ் வீராசாமி, சிஐடியூ கிருஷ்ணமூா்த்தி, எம்எல்எஃப் தியாகராஜன், ஏஐசிசிடியூ தாமோதரன், எஸ்டிடியூ ரகுபுநிஸ்தாா், கூட்டு நடவடிக்கைக் குழுவின் சி.தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், நவம்பா் 26ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை மறியல் போராட்டத்துடன் வெற்றிகரமாக நடத்துவது, மாவட்ட வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது, இதையொட்டி வரும் நவம்பா் 20ஆம் தேதி முதல் ஆா்ப்பாட்டம், கோரிக்கை விளக்கக் கூட்டங்கள் நடத்துவது, அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களின் ஆதரவைப் பெறுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.