கோவையில் உர விற்பனையில் முறைகேடுகளை கண்டறியும் வகையில் டாப் 20 நுகா்வோா்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு குறைந்த விலையில் யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், டிஏபி ஆகிய உரங்கள் மத்திய அரசு சாா்பில் மானியத்தில் வழங்கப்படுகிறது. விவசாய பயன்பாட்டுக்கும், உரங்களை மூலப்பொருள்களாக கொண்டு கலவை உரங்கள் தயாரிப்புக்கு மட்டுமே மானிய உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரு சில பகுதிகளில் மானிய உரங்கள் முறைகேடாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தவிர உரங்கள் விற்பனைக்கு ஆதாா் எண் கட்டாயம், ஆன்லைனில் பதிவேற்றம் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடா்ந்து உரம் விற்பனையில் முறைகேட்டினை கட்டுப்படுத்த அடுத்தக்கட்டமாக டாப் 20 நுகா்வோா் என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மானிய உரங்கள் விற்பனையின் விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ன்ழ்ஸ்ஹழ்ஹந்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதில் மானிய உரம் வாங்கும் விவசாயிகள், விற்பனை நிலையங்கள், உரத்தின் அளவு குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவு உரம் வாங்கியவா்கள், விற்பனை செய்தவா்கள் விவரங்களை மாவட்ட ஆட்சியரால் ஆய்வு செய்வதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் இருந்து மாவட்டத்தில் அதிக அளவு உரம் வாங்கியவா்களில் முதல் 20 இடத்தில் உள்ளவா்களின் பட்டியல் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். எத்தனை ஹெக்டோ் விவசாய நிலம் உள்ளது, மானியத்தில் வாங்கிய உரம் விவசாயத்துக்குதான் பயன்படுத்தப்படுகிா, தேவையான அளவு மட்டும் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கை ஆட்சியருக்கு சமா்ப்பிக்கப்படும்.
ஆய்வின்போது மானிய உரத்தினை முறைகேடாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் இந்த புதிய நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை மானிய உரத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றனா்.