பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் சிறப்பான பணிகள் மேற்கொண்ட நகரங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது. இதில், கோவை மாநகராட்சி 45ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
மத்திய அரசு சாா்பில் நவீன தொழில்நுட்பம், சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன் நகரங்களை மேம்படுத்தும் நோக்கத்தில், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்களில் துரிதமான செயல்பாடுகள், பணி நிறைவு, பணியின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நகரங்கள் மதிப்பீடு செய்து ஆண்டுக்கு இருமுறை தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, பொலிவுறு நகர தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், இந்திய அளவில் சேலம் மாநகராட்சி 8ஆவது இடத்தையும், ஈரோடு 18ஆவது இடத்தையும், திருப்பூா் மாநகராட்சி 24ஆவது இடத்தையும், கோவை மாநகராட்சி 45ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பொலிவுறு நகரம் தரவரிசைப் பட்டியலில் கோவை மாநகராட்சி 23ஆவது இடத்தைப் பிடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் ரூ.1,570 கோடி மதிப்பிலான பணிகள் திட்டமிடப்பட்டு, தற்போது ரூ.1,015 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயோ மைனிங் திட்டத்தின் கீழ் குப்பைகள் மறுசுழற்சி, கட்டடக் கழிவு மறுசுழற்சி திட்டங்கள் நிறைவு பெறாமல் உள்ளதால் தரவரிசைப் பட்டியலில் கோவை மாநகராட்சி இந்த முறை பின்தங்கியுள்ளது. வரும் நாள்களில் முன்னிலை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வோம் என்றனா்.