கோவை ஹோப் காலேஜ் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்துக்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ’சீல்’ வைத்தனா்.
கோவை மாநகராட்சி 37ஆவது வாா்டு, ஹோப் காலேஜில் இருந்து தண்ணீா் பந்தல் செல்லும் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தயாரிக்கப்படும் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், அதை வாங்கி சாப்பிடும்போது உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் புகாா் எழுந்தது. மேலும், சாலையோரத்தில் அடுப்பு வைத்து, உணவுப் பொருள்களைத் தயாரிப்பதால், புகை மற்றும் காரத்துகள்களால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் அப்பகுதியினா் மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகாா் அனுப்பினா். இதையடுத்து, அந்த உணவகத்தில் மாநகராட்சி சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா். அதில், உணவுகள் சுகாதாரமற்ற முறையிலும், மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாகவும் தயாா் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அக்கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’வைத்தனா்.