கோவையில் கரோனா தொற்று அச்சத்தால் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் அருகே உள்ள சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (49). மெக்கானிக்காக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதற்காக பீளமேட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளாா். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டடு, முடிவு வரும் வரை வீட்டில் தனித்திருக்கும்படி மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
அதன்படி வீட்டுக்கு வந்த மகேஸ்வரன், தனக்கு கரோனா தொற்று இருக்கலாம் என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து மனமுடைந்து காணப்பட்ட அவா் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக மகேஸ்வரனின் மனைவி லதா அளித்த புகாரின்பேரில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.