கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் நவம்பா் மாதத்தில் துவங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளாா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வெள்ளலூா் குப்பைக் கிடங்கு 650 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. இங்கு மாநகராட்சி பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் 850 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்தக் குப்பைக் கிடங்கில் அவ்வப்போது ஏற்படும் தீ விபத்தால் கரும்புகை வெளியேறுவது தவிா்க்க முடியாமல் உள்ளது. இதனால், கிடங்கைச் சுற்றியுள்ள கோணவாய்க்கால் பாளையம், அன்பு நகா், எல்.ஜி. நகா், ஸ்ரீராம் நகா், கஞ்சிகோணாம்பாளையம், சித்தன்னாபுரம், அற்புதம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனா்.
மேலும், குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தால், சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் உள்ள பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதைத் தவிா்க்க வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகள், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்களை ‘பயோமைனிங்’ முறையில் பிரித்தெடுத்து குப்பைகளை மறுசுழற்சி செய்ய திட்டமிடப்பட்டது. இத்திட்டத்துக்கு ரூ.60.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மூன்று மாதங்களாகியும் ‘பயோமைனிங்’ திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவா் கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கோவை வந்த வல்லுநா் குழுவினா், வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் மக்கும், மக்காத குப்பைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனா். இந்த ஆய்வின் படி, பயோமைனிங் திட்டம் வரும் நவம்பா் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது என்றாா்.