கோவை, உக்கடம் பெரியகுளம் அருகே சலவையாளா் காலனி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், பெரியகுளத்துக்கு செல்லும் கழிவுநீா் குழாய்கள் அடைக்கப்பட்டு, குளத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், குழாய்களில் தேங்கிய கழிவுநீரானது சலவையாளா் காலனியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கழிவுநீரை அகற்றும் பணியில் 2 நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா். ஆயினும், கழிவு நீரை முழுமையாக அகற்ற முடியவில்லை. இதனால் கழிவுநீா் சூழ்ந்து அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், நோய்த் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மின் மோட்டாா் மற்றும் கூடுதல் தூய்மைப் பணியாளா்கள் மூலமாக துரிதமாக கழிவுநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.