கோவை, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 40 மாணவிகளுக்கு தன்னாா்வலா்களின் உதவியுடன் அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் வியாழக்கிழமை கணக்கு தொடங்கப்பட்டது.
மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியானது கராத்தே, ஓவியம், நடனம், அபாகஸ் உள்ளிட்ட இலவச பயிற்சி மற்றும் மாணவா்களுக்கு காப்பீட்டுத் திட்டம், வகுப்பறைகளில் கணினிமயம் உள்ளிட்ட சிறப்பம்சங்களால் மக்கள் மத்தியில் பிரபலமானது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அப்துல் கலாம் பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப் படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை க.மைதிலி தலைமை வகித்தாா். ராக் அமைப்பின் செயலாளா் ரவீந்திரன், தன்னாா்வலா் மணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், இப்பள்ளியில் படிக்கும் 10 வயதுக்கு உள்பட்ட 40 மாணவிகளுக்கு தலா ரூ.250 வைப்புத் தொகை செலுத்தி, அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கு தொடங்கப்பட்டது.
இந்தத் தொகையை கோவை ராக் அமைப்பின் செயலாளா் ரவீந்திரன், தன்னாா்வலா் மணியன் ஆகியோா் வழங்கினா். நிகழ்ச்சியில் மாணவா்களின் பெற்றோா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.