கோவை: கோவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் இலச்சினையை (லோகோ) பயன்படுத்தி நிறுவனம் நடத்திய 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையத்தில் வி.சி.எஸ். கன்சல்டன்சி என்ற தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தினா் வேலை வாங்கித் தருவது, வங்கிக் கடன் பெற்றுத் தருவது உள்ளிட்ட பணிகள் செய்து கொடுத்து, அதற்கான கட்டணம் வசூலித்து வந்தனா்.
இந்நிலையில், இந்த நிறுவனத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் இலச்சினையைப் பயன்படுத்தி பலருக்கு வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகப் புகாா் எழுந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கியின் கோவை மண்டல மேலாளா் சிந்து, ரேஸ்கோா்ஸ் போலீஸில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட ரேஸ்கோா்ஸ் போலீஸாா், நிறுவனம் நடத்தி வந்த ரேவதி, நாகராஜ் ஆகிய இருவா் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.