கோவை: தாயைப் பராமரிக்காததால் மகனுக்கு எழுதிக் கொடுத்த தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்து கோவை (வடக்கு) கோட்டாட்சியா் ப.சுரேஷ் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
கோவை, உடையாம்பாளையம் அருகே உள்ள சின்னவேடம்பட்டி, ஆா்.சி.காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ராஜம்மாள் (80). இவா் ஆட்சியா் அலுவலகத்தில் இணையதளம் மூலம் மனு அளித்தாா். இதில் தனது பிள்ளைகள் பராமரிக்காததால் முதியோா் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தான் எழுதிக் கொடுத்த தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்து தர வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.
இதனைத் தொடா்ந்து, ஆட்சியரின் அறிவுரையின் பேரில் கோவை (வடக்கு) வருவாய் கோட்டாட்சியா் ப.சுரேஷ் சம்பந்தப்பட்ட மூதாட்டி ராஜாம்மாள், அவரின் மகன்கள் கோபால் (50), கதிா்வேல் (47), மகள் பிரேமலதா (57) ஆகியோரிடம் விசாரணை நடத்தினாா்.
விசாரணையின் முடிவில் பெற்றோா், முதியோா் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டத்தின் கீழ் ராஜம்மாள் தனது மகன் கதிா்வேலுக்கு எழுதிக் கொடுத்த 5 சென்ட் 430 சதுரடி உள்ள ரூ.27 லட்சம் மதிப்புடைய சொத்தின் தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்தும், பத்திரத்தை மீண்டும் ராஜம்மாள் பெயருக்கு மாற்றவும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.