கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
அரசு கலைக் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், தாவரவியல், விலங்கியல், இயற்பியல், கணிதம், எம்.காம்., கணினி அறிவியல் உள்ளிட்ட 20 முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் ஆண்டுதோறும் 552 மாணவ மாணவிகள் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.
2020-2021ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு 1,999 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், சிறப்புப் பிரிவினருக்கு அக்டோபா் 27ஆம் தேதியும், பொதுப் பிரிவினருக்கு 28ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளைத் தோ்வு செய்தனா். இதைத் தொடா்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது.