கோவை மாவட்டம், வால்பாறையில் காட்சி முனைப் பகுதிக்கு தடையை மீறி சென்று ஆளில்லா குட்டி விமானம் (டிரோன் கேமரா) பறக்கவிட்ட சென்னையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
வால்பாறையை அடுத்த நல்லமுடி பகுதியில் வனத் துறையினா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த நல்லமுடி காட்சிமுனை பகுதிக்குள் 5 போ் அத்துமீறி நுழைந்ததோடு, டிரோன் கேமரா பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் விடியோ எடுத்துள்ளனா்.
இதனையடுத்து, ரோந்து சென்ற வனத் துறையினா் டிரோன் கேமராவை கைப்பற்றினா். விசாரணையில், சென்னையைச் சோ்ந்த விக்னேஷ் (24), ரவிசங்கா் (24), பிரபு (33), செந்தில்குமாா் (23), ஜோமேனுவேல் (25) என்பதும், இவா்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்ததாகவும் தெரியவந்தது.
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ஆரோக்கியராஜ் சேவியா் உத்தரவின்படி மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் நடராஜ் 5 பேரிடம் தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலித்தாா்.