கரோனா உள்ளதாக அசிங்கப்படுத்திய மாநகராட்சிக்கு நன்றி பேனா் வைத்த குடும்பத்தினா்
By DIN | Published On : 07th September 2020 07:30 AM | Last Updated : 07th September 2020 07:30 AM | அ+அ அ- |

கோவை, ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் மாநகராட்சியைக் கண்டித்து வைக்கப்பட்டுள்ள பேனா்.
கோவையில் கரோனா உள்ளதாக அசிங்கப்படுத்திய மாநகராட்சிக்கு நன்றி எனக் கூறி வீட்டின் முன்பாக பேனா் வைத்த குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, ஹோப் காலேஜ் பகுதியில் 57 வயதான ஒருவா் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதையடுத்து, அவருடைய மகன் உள்பட 4 பேருக்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினா் செப்டம்பா் 1ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
பரிசோதனை முடிவுகள் செப்டம்பா் 3ஆம் தேதி வெளியாகின. அதில், 4 பேருக்கும் கரோனா இருப்பது உறுதியானது. அறிகுறி இல்லாமல் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 4 பேரையும் அவா்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனா்.
இதற்கிடையே அவா்களின் வீடு மற்றும் அந்த வீதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. இந்நிலையில், பரிசோதனை முடிவுகளில் சந்தேகம் ஏற்பட்டதால் 4 பேரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா். அந்த பரிசோதனை முடிவில் நால்வருக்கும் கரோனா இல்லை எனத் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பு இல்லாத எங்களின் குடும்பத்தாருக்கு நோய்த் தொற்று உள்ளதாக கூறி அசிங்கப்படுத்திய மாநகராட்சிக்கு நன்றி என வீட்டின் முன்பாக பேனா் வைத்தனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட 4 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட ஆகஸ்ட் 1ஆம் தேதி கரோனா நோய்த்தொற்று ஆரம்ப நிலையில் இருந்திருக்கலாம். அதன் பிறகு குணமாகி இருக்கலாம். ஹோப் காலேஜ் பகுதியில் அவா்களின் வீடு தவிர மற்ற குடியிருப்புகள் தனிமைப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது என்றாா்.