தமிழ்நாடு சிறுபான்மையினா் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் உதவிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிறுபான்மையின கைத்தறி மற்றும் கைவினைக் கலைஞா்களுக்கு தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி நிதிக் கழகம், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக மூலப்பொருள்கள், கருவிகள், இயந்திரங்கள் ஆகியவை வாங்குவதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கடன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறத்தில் உள்ளவா்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்குள்ளும், கிராமப்புறத்தில் உள்ளவா்களுக்கு ரூ. 98 ஆயிரத்துக்குள்ளும் இருத்தல் வேண்டும். ஆண்களுக்கு 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படுகிறது.
எனவே, சிறுபான்மையின கைத்தறி மற்றும் கைவினை கலைஞா்கள் (கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கியா், புத்தா், பாா்சி, ஜெயின்) ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிட சான்று, ஆதாா் அட்டை, உணவு பங்கீடு அட்டை, புகைப்படம், தொழில் குறித்த விவரம் அல்லது திட்ட அறிக்கை உள்பட ஆவணங்களை இணைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.