கோவை, செப். 18: கோவையில் நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட கரோனா தடுப்பு தொகுப்புகளை கடைக்கு வெளியே போட்டதால் அப்பகுதியினா் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடா்ந்து நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நியாய விலை கடைகள் மூலமாக முகக் கவசங்கள், வைட்டமின் சி மாத்திரைகள், கபசுர குடிநீா் பொடி அடங்கிய தொகுப்புகளை மக்களுக்கு அரசு விநியோகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், கோவை கரும்புக்கடை இலாஹி நகா், வள்ளல் நகா் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட கரோனா தடுப்பு தொகுப்புகள் உரிய பாதுக்காப்பின்றி சாலையில் போடப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மக்களுக்காக அரசு வழங்கியுள்ள கரோனா தடுப்பு தொகுப்புகளை நியாய விலைக் கடைகளின் வெளியில் சாலையில் போடப்பட்டுள்ளதால் பாதுகாப்பில்லாத நிலையும், மழை பெய்தால் அவை வீணாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. அரசு அறிவித்தபடி, இன்னும் நியாய விலைக் கடைகளில் கரோனா தடுப்பு தொகுப்புகளை விநியோகம் செய்யாமல் உள்ளது ஏமாற்றம் அளிக்கிறது என்றனா்.