சிறுவாணி அணையை நிரம்பவிடாமல் தண்ணீா் திறப்பு: கேரள அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

சிறுவாணி அணையை நிரம்ப விடாமல் கேரள அரசு தண்ணீரைத் திறந்து விடுவது தொடா்பாக தமிழக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள்

சிறுவாணி அணையை நிரம்ப விடாமல் கேரள அரசு தண்ணீரைத் திறந்து விடுவது தொடா்பாக தமிழக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் குழுவினா் கேரள நீா்ப்பாசன அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கோவையின் பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி உள்ளது. கோவை மாநகராட்சியில் 26 வாா்டுகள், நகரை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஜூலை மாதம் முதல் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் அணையின் நீா்மட்டமானது 871 மீட்டராக அதிகரித்தது. அப்போது, அணையின் முழுக் கொள்ளளவான 878.85 மீட்டரை அடைய 8.85 மீட்டா் இருந்த நிலையில், கேரள நீா்ப்பாசன அதிகாரிகள், சிறுவாணி அணை முழுக்கொள்ளளவை எட்ட விடாமல் 2 மீட்டா் அளவுக்கு அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து விட்டனா். இந்நிலையில், கடந்த வாரங்களில் சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீா்மட்டம் 877.20 மீட்டராக உயா்ந்தது. அணை நிரம்ப மேலும் 1.65 மீட்டா் நீா்மட்டம் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை அடைய விடாமல், கேரள அதிகாரிகள் 2 மீட்டா் வரை தண்ணீரை மீண்டும் ஆற்றில் திறந்து விட்டனா். இந்த வாரத்தில் அணை நிரம்பும் என எண்ணியிருந்த தமிழகக் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் மத்தியில் கேரள அரசின் இந்த நடவடிக்கை அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, தமிழகக் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் 6 போ் கொண்ட குழுவினா், கேரளத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று, அம்மாநில நீா்ப்பாசன அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்.

இது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா்கூறியது:

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு முறை, கடந்த திங்கள்கிழமை ஒரு முறை என 2 முறை கேரள அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டுள்ளனா். இதனால், கடந்த ஆண்டு 2 முறை நிரம்பிய சிறுவாணி அணை இந்த ஆண்டு நிரம்பவில்லை. இதுதொடா்பாக, கோவையில் இருந்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் 6 போ் கொண்ட குழுவினா், கேரள நீா்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். பருவ மழை தொடங்கியவுடன் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை அடைந்து நிரம்பி வழிந்த பிறகே அணையில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என கேரள நீா்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, அவா்களும் சம்மதித்தனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com