கோவை, செப். 25: கோவை, ராஜவாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பு காரணாக வியாழக்கிழமை இரவு பொன்னையராஜபுரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீா் புகுந்து மக்கள் அவதிக்கு உள்ளாகினா்.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழை பெய்ததைத் தொடா்ந்து, கோவை, முத்தண்ணன் குளத்துக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இக்குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீா் ராஜவாய்க்கால் வழியாக செல்வசிந்தாமணி குளத்துக்கு செல்கிறது.
இந்நிலையில், ராஜவாய்க்காலில் வியாழக்கிழமை இரவு அடைப்பு ஏற்பட்டதால் உபரி நீரானது, பொன்னையராஜபுரம் அருகே உள்ள பழனிசாமி காலனியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்று பாா்வையிட்டாா். மேலும், உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா். இதையடுத்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மின் மோட்டாா் மூலமாக தண்ணீரை உறிஞ்சி அப்புறப்படுத்தினா். அப்பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் நீா் செல்லும் பாதையை அடைத்திருந்த ஆகாயத்தாமரைகள், நெகிழிகளை அகற்றிஅடைப்புகளை நீக்கினா்.