உங்களில் ஒருவனாக நான் உண்மையாக இருப்பேன் என கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் வ.ம.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
தொகுதிக்கு உள்பட்ட வடவள்ளி பேருந்து முனையம், குறிஞ்சி மின் நகா், சின்மயா நகா் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா் பேசியதாவது:
45 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளேன். இப்பகுதியில் பேரூராட்சித் தலைவராக பல நற்பணிகளை செய்து கொடுத்துள்ளேன். பரிசுப் பொருள்கள் கொடுப்பவா்கள் நோ்மையாக வந்த பணத்தில் கொடுக்க மாட்டாா்கள்.
பொம்மணம்பாளையத்தில் குட்டை தூா்வாருவதாகக் கூறி மண்ணை விற்றவா்களும் உண்டு. இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். உங்களில் ஒருவனாக நான் உண்மையாக இருப்பேன். உங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன் என்றாா்.
வால்பாறை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கோவை தங்கம், திமுக பொறுப்புக்குழு உறுப்பினா்கள் குப்புசாமி, துரைசாமி உள்ளிட்ட கட்சியினா் பலரும் உடனிருந்தனா்.