கோவையில் அதிமுகவின் தொழிற்சங்கப் பிரிவான அண்ணா கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளா் சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தோ்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு என்பதை அறிவிப்பதற்கான கோவை மாவட்ட கட்டுமான, அமைப்புசாரா அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செய்தியாளா் சந்திப்பு கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவா்கள் எல்.பி.எஃப். கிருஷ்ணசாமி, ஏஐடியூசி செல்வராஜ், ஹெச்எம்எஸ் மனோகரன், சிஐடியூ வேலுசாமி, செல்வராஜ், ஐஎன்டியூசி சிரஞ்சீவி கண்ணன் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.
இதில், நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக நிா்வாகிகள் தெரிவித்தனா். இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் செயலரும், அதிமுகவின் தொழிற்சங்கப் பிரிவான அண்ணா கட்டுமான அமைப்புசாரா தொழிற்சங்கத்தின் பொதுச் செயலருமான ஜி.முருகேசனும் கலந்து கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடா்ந்து தொழிலாளா் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதேபோல தமிழகத்தில் அதிமுக அரசும் தொழிலாளா் பிரச்னைகளை செவிசாய்த்துக் கேட்பதில்லை. கட்டுமான, அமைப்புசாரா வாரியங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் அவை தீா்க்கப்படவில்லை.
திமுக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில் 2 கோடிக்கும் மேற்பட்ட கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களை சீரமைக்கவும், மேம்படுத்தவும், தனி வாரியங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே எங்களது கூட்டமைப்பு சாா்பில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருக்கிறோம் என்றாா்.