கோவையில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது.
இதனைத் தொடா்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் முன்களப் பணியாளா்களுக்கும், பொது மக்களில் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவா்களில் இணை நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் மாா்ச் 1 ஆம் தேதியில் இருந்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் தீவிரமாகிவுள்ளதால் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்தது. பொதுமக்களில் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள், முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
இதனைத் தொடா்ந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாகவும், கரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இனி முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், பொதுமக்கள் யாராக இருந்தாலும்
45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடா்ந்து கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவையில் இனி 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
1.43 லட்சம் தடுப்பூசிகள் வருகை
கோவை மாவட்டத்துக்கு 1 லட்சத்து 600 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 13 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பூசிகள், அவசர பயன்பாட்டுக்காக 30 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் என மொத்தம் 1லட்சத்து 43 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் திங்கள்கிழமை வந்துள்ளன.
கோவையில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் கடந்த 2 நாள்களாக அடைக்கப்பட்டிருந்த மையங்களில் திங்கள்கிழமை முதல் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை முதல் அனைத்து மையங்களிலும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் எப்போதும்போல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.