கோவை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள் உள்பட 150க்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தியவா்களுக்கும் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாகப் புகாா்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடா்ந்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் விவரங்கள் குறித்து சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறையினா் கூறியதாவது:
கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திக்கொண்ட 14 நாள்கள் கழித்தே உடலில் எதிா்ப்பு சக்தி உருவாகும். இதனால் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் 45 நாள்கள் வரை கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் அலட்சியமாக இருந்தால் நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில் கரோனா பாதிக்கப்பட்டவா்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாநில சுகாதாரத் துறையும் அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடா்ந்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.