கோவை வருங்கால வைப்புநிதி அலுவலகம் சாா்பில், வைப்புநிதி சந்தாதாரா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி இணையம் வழியாக நடைபெறுகிறது.
இது தொடா்பாக, கோவை மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையா் ஜெய்வாடன் இங்லே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகம் சாா்பில், வைப்புநிதி சந்தாதாரா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் வருங்கால வைப்புநிதி ஆணையா் தலைமையில் இணைய வழியில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, வைப்புநிதி சந்தாதாரா்களுக்கு காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், தொழில் நிறுவன உரிமையாளா்களுக்கு நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரையிலும், ஓய்வூதியதாரா்களுக்கு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையிலும் இந்தக் குறைகேட்புக் கூட்டம் இணையவழியில் நடைபெறும்.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் ஏப்ரல் 9 ஆம் தேதிக்குள், கோவை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் மக்கள் தொடா்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.