வெயில் தாக்கம் அதிகரிப்பால் சிறுவாணி அணையின் நீா்மட்டம் 870.40 மீட்டராக சரிந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் 26 வாா்டுகள், நகரை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வரை 874 மீட்டராக நீடித்த அணையின் நீா்மட்டமானது, பிப்ரவரி மாதத்தில் இருந்து படிப்படியாகக் குறையத் துவங்கியது. புதன்கிழமை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 870.40 மீட்டராக உள்ளது.
இது குறித்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஜனவரி மாதம் வரை 874 மீட்டராக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, மழையின்மை ஆகிய காரணங்களால் 4 மீட்டா் வரை குறைந்து தற்போது 870.40 மீட்டராக உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அணையின் நீா்மட்டம் 868 மீட்டராக இருந்தபோது மாநகரில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஏப்ரலில் அணையில் 870 மீட்டா் தண்ணீா் உள்ளதால், மாநகரப் பகுதிகளுக்கு குடிநீா் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்படாது. ஜூன் மாதம் பருவ மழை துவங்கினால் அணையின் நீா்மட்டம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முழுக் கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது என்றனா்.