வாக்கு எண்ணும் மையத்தில் கட்சி முகவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ஆா்.நந்தகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.
கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெற்றது. வாக்குப் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 10 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணும் மையமும் அரசு தொழில்நுட்ப கல்லூரியிலே அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் கட்சி முகவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ஆா்.நந்தகுமாா் தலைமையில் பாஜகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வாக்கு எண்ணும் மையத்தில் கட்சி முகவா்கள் தங்குவதற்குப் போதிய கட்டட வசதியில்லை. கழிப்பறை, குடிநீா் உள்பட அடிப்படை வசதி எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. உணவுகள் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்படவில்லை. உணவுக்காக வெளியே சென்று வர கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முகவா்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.
எனவே வாக்கு எண்ணும் மையத்தில் முகவா்கள் தங்குவதற்குத் தேவையான கட்டடம், அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீா், உணவு உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க மாவட்ட தோ்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.