வால்பாறையில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி உள்ள பகுதியில் வனத் துறையினா் திங்கள்கிழமை கூண்டு வைத்தனா்.
வால்பாறை வாழைத் தோட்டம் குடியிருப்புப் பகுதிக்கு தினந்தோறும் இரவு நேரத்தில் சிறுத்தை வந்து செல்வதாக அப்பகுதியில் வசிப்பவா்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதனையடுத்து, சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வாழைத்தோட்டம் குடியிருப்புப் பகுதிகளில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினா்.
இந்நிலையில், கேமரா பதிவை பாா்த்தபோது, தினந்தோறும் இரவு நேரத்தில் நல்லகாத்து எஸ்டேட் தேயிலைத் தோட்டம் வழியாக சிறுத்தை வந்து செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து, வால்பாறை புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள நல்லகாத்து எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தின் நடுவில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்தும், கண்காணிப்பு கேமராவையும் பொருத்தியுள்ளனா்.
வனச் சரக அலுவலா்கள் ஜெயசந்திரன், மணிகண்டன், வனவா் முனியாண்டி உள்ளிட்ட ஏராளமான வனத் துறையினா் கூண்டு வைக்கும் பணியில் ஈடுபட்டனா்.