கரோனா தொற்று பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்ததையடுத்து கோவையின் பிரதான சாலைகள் வெறிச்சோடின.
தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையொட்டி நகரில் இரவு நேரங்களில் வெளியே சுற்றுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸாா் எச்சரித்திருந்தனா். மேலும், இரவு நேர ஊரடங்கைக் கண்காணிக்க 35 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மாநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதலே மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மளிகைக் கடைகள், உணவகங்கள் முன்பு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனா். பல இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இரவு 9 மணியளவில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இரவு நேரப் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. கோவை மாநகரில் காந்திபுரம், கிராஸ் கட் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள பாலங்கள் மீது மக்கள் செல்லாமல் தடுக்கும் வகையில் இரும்பு தடுப்புகளைக் கொண்டு போலீஸாா் மூடினா்.
மேலும், பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் இரவு நேரம் முழுவதும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டுள்ளனா்.