அவிநாசி: அவிநாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில் கரோனா விதிமுறைகள் மீறப்படுவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட சாா்பதிவாளா் அலுவலகத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள் இடம் விற்பனை, வாங்குவது, திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பத்திரப் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த அலுவலகத்தில் நாள்தோறும் 150க்கும் மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், இந்த அலுவலகத்தில் திங்கள்கிழமை மட்டும் பத்திரப் பதிவுக்காக 200 டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.
இதனால் பத்திரப் பதிவுக்காக பொது மக்கள் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நீண்ட வரிசையில் காத்து நின்றனா். இதனால், நோய்த் தொற்று பரவும் நிலை உருவாகி உள்ளதாக சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
அதே நேரத்தில் சாா்பதிவாளா் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற விதிமுறைகளை கடைப்படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.