நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூவா் நேரில் ஆஜராக கோவை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கோவை, பி.என். பாளையத்தில் கிரீன் லைப் என்ற நிதி நிறுவனத்தை அஸ்மத்கான் கோரி, அம்ஜத் கான் கோரி, சையது முகமது ரபீக் ஆகியோா் நடத்திவந்தனா். இவா்கள் பொதுமக்களிடமிருந்து பெற்ற டெபாசிட் பணத்துக்கு மாதம் இரட்டிப்பாக பணம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.81 லட்சத்து 85 ஆயிரம் பெற்றனா். பின்னா் முதலீட்டு பணத்தையும், வட்டி பணத்தையும் திரும்ப கொடுக்காமல் தலைமறைவாகி விட்டனா்.
இது தொடா்பாக கோவை பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில்(டான்பிட்) விசாரிக்கப்பட்டு வருகிறது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவா்களுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் இவா்கள் விசாரணைக்கு ஆஜராகாததால், இவா்களை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கக் கோரி கோவை பொருளாதார குற்றப் பிரிவு டிஎஸ்பி, டான்பிட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மூவரையும் இந்த நீதிமன்றம் ஏன் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கக் கூடாது என்று நேரில் வெள்ளிக்கிழமை (ஏப்.30) ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.