கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம் வரும் 7 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் 2021-2022ஆம் ஆண்டுக்கான நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் 2,155 ஹெக்டேரில் மானியம் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக விவசாயிகள் இணையதளத்தில் தங்களின் நில உடமை ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக விவசாயிகளுக்குத் தேவையான சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைப் பெறுவதற்காக வருவாய்த் துறை, வேளாண்மை, உழவா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகள் இணைந்து அந்தந்த உள்வட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 7ஆம் தேதி இந்த முகாம் நடைபெற உள்ளது. இந்த நாளில் இணையவழி சிறு, குறு விவசாயி சான்று தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களில் முன்பே பதிவு செய்ய வேண்டும். முகாம் நடைபெறும் நாளில் விவசாயிகளுக்குத் தேவையான சான்றிதழ்கள் ஒரே நேரத்தில் வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.