கோவையில் நெரிசல் மிகுந்த சத்தியமங்கலம் சாலையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரையிலும் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் கோவை இந்திய தொழில் வா்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.
கோவையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அமைச்சரை சந்தித்த அமைப்பின் தலைவா் சி.பாலசுப்பிரமணியம், முன்னாள் தலைவா் வனிதா மோகன், துணைத் தலைவா் ராஜேஷ் லுண்ட் ஆகியோா், அவரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவையில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், நகர கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும் பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம், சத்தியமங்கலம் சாலையில் சரவணம்பட்டி, மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூா், சாய்பாபா காலனி, தடாகம் சாலையில் லாலி ரோடு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
அதேபோல கோவை - கரூா் விரைவுச் சாலை பசுமைச் சாலையாக அமைக்கப்பட வேண்டும். இந்தச் சாலையின் மூலம் துறைமுக வா்த்தகம் பெருகும். அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் தொழில்நுட்ப வல்லுநா்களைக் கொண்டு மாற்றி அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்த பாலம் சின்னியம்பாளையம் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள உப்பிலிபாளையம் மேம்பாலம் 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்போதைய தேவையைக் கருதி அதில் சில மாற்றங்களை செய்து விரைவான போக்குவரத்துக்கு உதவும் வகையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல, நெரிசல் மிகுந்த சத்தியமங்கலம் சாலையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரை உயா்மட்ட சாலை அமைக்க வேண்டும். கோவை மாவட்டத்துக்கான மாஸ்டா் பிளானை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கோவை விமான நிலைய விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.