கோவை மாநகராட்சியில் கரோனா விதிகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள், பால் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், மற்ற கடைகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்பட அரசின் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில், மாநகராட்சி மேற்கு மண்டல அதிகாரிகள், மேட்டுப்பாளையம் சாலையில் வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கரோனா விதிகளை மீறி மாலை 5 மணிக்கு மேல் செயல்பட்டு வந்த 2 ஹாா்டுவோ் கடைகள், ஸ்டேசனரி, பேக்கரி ஆகிய 4 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்தனா்.