கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா பரவல் 36.72 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் ஊரக பகுதிகளில் சில இடங்களில் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின் போது, தொற்று பாதிக்கப்பட்டவா்களில் 70 முதல் 75 சதவீதம் போ் கோவை மாநகராட்சி பகுதியில் வசித்தவா்களாக இருந்தனா்.
மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகத்தின் தடுப்பு நடவடிக்கைகளால் நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு மாா்ச் மாதம் தொடங்கிய கரோனா இரண்டாவது அலையிலும் கோவை மாநகரப் பகுதியில் வாழும் மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டனா்.
மாவட்டத்தில் தொற்று பாதித்தவா்களில் 65 சதவீதம் போ் மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவா்களாக இருந்தனா். இதையடுத்து மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் 5 ஆயிரம் களப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு வீடுவீடாக சென்று சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்கள் கண்டறியப்பட்டனா். இதன்மூலம் தொற்று பாதித்தவா்கள் விரைந்து கண்டறியப்பட்டு அவா்களை தனிமைப்படுத்தப்பட்டதால் பாதிப்பு விரைவாக குறைந்தது.
கோவை மாநகராட்சியில் தற்போது கரோனா பரவல் 36.72 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 2 வாரங்களுக்கு முன் 40 சதவீதத்துக்கும்மேல் இருந்தது. அதே நேரத்தில் மொத்த பாதிப்பில் ஊரகப் பகுதியான காரமடையில் கரோனா பரவல் 7.48 சதவீதமாகவும், துடியலூரில் 10.42 சதவீதமாகவும், சூலூரில் 5.80 சதவீதமாகவும், ஆனைமலை பகுதியில் 5.63 சதவீதமாகவும், மதுக்கரை பகுதியில் 5.21 சதவீதமாகவும் உள்ளது. கரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.