கோவையில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வருவதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுகளிலும், அனைத்து விதாமன சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்காக 1,200க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் மற்ற நோயாளிகளைக் காட்டிலும், கரோனா நோயளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, கோவையில் நோய்த் தொற்றுப் பரவல் குறைந்துள்ளதால் அரசு மருத்துவமனையில் அனைத்து துறைகளிலும் அனைத்து விதமான சிகிச்சைகள் மீண்டும் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:
கரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. இதனால் அரசு மருத்துவமனையில் சாதாரணமாக மேற்கொண்டு வந்த பல்வேறு சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மிக அவசர சிகிச்சைக்கு மட்டுமே வர நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் கருப்புப் பூஞ்சை நோயாளிகளுக்கு அதிக அளவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மற்ற துறைகளில் முக்கிய, அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், கோவையில் தற்போது கரோனா நோய்த் தொற்று தினசரி எண்ணிக்கை 200க்கும் கீழ் குறைந்துள்ளதால் அரசு மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் அனைத்து துறைகளிலும் அனைத்து விதமான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள துறை சாா்ந்த மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.