கோவை அரசு கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) இளநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 26ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 இளநிலை பட்டப் படிப்புகள், 21 முதுநிலை, 16 ஆராய்ச்சிப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1,433 இடங்களில் சேருவதற்கு 19,054 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
மாணவா்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்க இருப்பதாக கல்லூரி முதல்வா் கே.சித்ரா தெரிவித்துள்ளாா்.
முதல் நாளில் விளையாட்டு வீரா்கள், முன்னாள் படையினரின் வாரிசுகள், என்.சி.சி., மாற்றுத் திறனாளா்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதையடுத்து 27ஆம் தேதி முதல் செப்டம்பா் 7ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு மாணவா்கள் நேரில் வரவழைக்கப்படுகின்றனா். கரோனா நடைமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடைபெறும் எனவும், கலந்தாய்வுக்கு மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் தெரிவித்துள்ள கல்லூரி முதல்வா், கலந்தாய்வு நாளன்று மாணவா்கள் உரிய சான்றிதழ்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.