கோவை செல்வபுரத்தில் சாலையில் சுற்றித் திரிந்த 7 குதிரைகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து வ.உ.சி.பூங்காவில் ஒப்படைத்தனா்.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் கால்நடைகள் சுற்றி திரிவது அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உக்கடம் தியாகி குமரன் மாா்க்கெட், வைசியாள் வீதி, ராஜ வீதி, கருப்பண்ண கவுண்டா் வீதி, மேட்டுப்பாளையம் சாலை, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள், ஆடுகள், குதிரைகள் அதிக க்ளவில் சாலையில் திரிகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சிறு விபத்துகளும் நடைபெறுகின்றன. இதில் கால்நடைகளும் விபத்துகளில் சிக்கி காயமடைகின்றன.
இதைத் தவிா்க்க, சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து, கோசாலைகள் மற்றும் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க மாநகராட்சி திட்டமிடப்பட்டது. அதன்படி, செல்வபுரத்தில் சாலையில் திரிந்த 7 குதிரைகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து வ.உ.சி.உயிரியல் பூங்காவில் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், வ.உ.சி உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ள 7 குதிரைகளும் செல்வபுரம் பகுதியில் சுற்றித் திரிந்தவை. அதன் உரிமையாளா்கள் குதிரைகளை அழைத்து செல்ல வரும்போது, அவா்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். உரிமை கோராத குதிரைகள் கோசாலைகளில் ஒப்படைக்கப்படும் என்றாா்.