இன்றுமுதல் கடைகள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி: ஆட்சியா்

கோவையில் திங்கள்கிழமைமுதல் கரோனா நோய்த் தொற்று வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

கோவையில் திங்கள்கிழமைமுதல் கரோனா நோய்த் தொற்று வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக அமலில் இருந்த பொது முடக்கம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மேலும் கூடுதல் தளா்வுகளுடன் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பா் 6 ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு வாரங்களில் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. பள்ளிகளில் செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், மழலையா் வகுப்புகள் கரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து கல்லூரிகள், பட்டயப் படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேற்படி அனுமதிக்கப்பட்ட கல்லூரிகள், பள்ளிகள், காப்பகங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், காப்பாளா்கள் உள்பட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.

நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவீதப் பயிற்சி பெறுபவா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பயிற்சியாளா்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவா்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிா் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள் கரோனா நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (ஊக 2, ஊக 3) செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீதப் பணியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதே நேரம் பணியாளா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் அனைத்து கடைகளும் திங்கள்கிழமை முதல் இரவு 10 மணி வரை கரோனா நிலையான வழிகாட்டி நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத பாா்வையாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. திரையரங்கு பணியாளா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை திரையரங்கு உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும்.

கோவை மாவட்டம் கேரள மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ளதால் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

அதன்படி மாநகராட்சி எல்லைக்குள்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7 வது வீதிகள், ஒப்பணக்கார வீதி, ராமமூா்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகா் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூா் சந்திப்பு ஆகிய வீதிகள் மற்றும் அதனுடன் தொடா்புடைய துணை தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அத்தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல அனைத்து மால்களும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி மாட்டு சந்தையும் தற்காலிகமாக இயங்க தடைவிதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்களில் பொது மக்கள் பாா்வையிட தடை விதிக்கப்படுகிறது.

தமிழக, கேரள மாநில எல்லைகளில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்துக்குள் விமானம், தொடா்வண்டி, சோதனைச் சாவடிகள் வழியாக வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும். அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். இதற்காக மாவட்டத்தில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com