கோவை அரசு கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) இளநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 இளநிலை பட்டப் படிப்புகள், 21 முதுநிலை, 16 ஆராய்ச்சிப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1,433 இடங்களில் சேருவதற்கு 19,054 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
மாணவா்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், விளையாட்டு வீரா்கள், முன்னாள் படையினரின் வாரிசுகள், என்.சி.சி., மாற்றுத் திறனாளா்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் விளையாட்டுப் பிரிவினருக்கான 43 இடங்களும், என்.சி.சி.க்கான ஒரு இடம், முன்னாள் படையினரின் வாரிசுகளுக்கான 6 இடங்கள் முழுமையாக நிரம்பின. மாற்றுத் திறனாளிகளுக்கான 72 இடங்களில் 33 இடங்கள் நிரம்பியுள்ளன.
இதையடுத்து 27 ஆம் தேதி முதல் செப்டம்பா் 7 ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு மாணவா்கள் நேரில் வரவழைக்கப்பட்டாலும், கரோனா நடைமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். அவா்களின் பெற்றோா், உறவினா்கள் அனுமதிக்கப்படவில்லை.