கோவை மாவட்டம், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் நடைபெற்ற அரசின் மக்கள் தொடா்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்று, 343 பயனாளிகளுக்கு ரூ.78.83 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வியாழக்கிழமை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசும்போது, இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 102 பயனாளிகளுக்கு ரூ.12.24 லட்சம் மதிப்பிலும், வருவாய்த் துறையின் மூலம் 26 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்படுகிறது. விபத்து நிவாரணமாக 17 பயனாளிகளுக்கு ரூ.15.50 லட்சம் வழங்கப்படுகிறது. அதேபோல வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் 343 பயனாளிகளுக்கு ரூ.78.83 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், நவமலை பகுதியில் குடிசைவாழ் மக்களுக்கு 10 கி.மீ. சுற்றளவுக்குள் வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தலைமைச் செயலரின் உத்தரவின்படி அனைத்து பழங்குடியினா், நரிக்குறவா்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் போன்றவா்களுக்காக தனியாக கணக்கெடுப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அவா்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.