தமிழகத்தில் வரும் வாரங்களில் சின்ன வெங்காயம் விலை உயர வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி 2019-20 ஆம் ஆண்டின்படி தமிழகத்தில் 28 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு 3.55 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம், கா்நாடகம், ஆந்திர பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் 90 சதவீதம் சின்ன வெங்காயமும், 10 சதவீதம் பெல்லாரி வெங்காயமும் பயிரிடப்படுகிறது.
திண்டுக்கல், திருப்பூா், பெரம்பலூா், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகஅளவில் பயிரிடப்படுகிறது.
கா்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த மழையால் பயிா்கள் சேதமடைந்துள்ளதால் தமிழகத்துக்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.
ஜூலை, அக்டோபா் மாதங்களில் நடவு செய்யப்பட்ட பயிா்கள் பருவ மழையினால் பாதிக்கப்பட்டதால் விளைந்த, சேமித்து வைக்கப்பட்ட வெங்காயம் அழுகிவிட்டது. இதனால் சின்ன வெங்காயம் விலை உயர வாய்ப்புள்ளது. கா்நாடகத்தில் இருந்து புதிய வரத்து ஆரம்பித்தால் மட்டுமே விலை குறையும். முதல் தர சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை வரும் வாரங்களில் கிலோ ரூ.75 வரை இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜனவரி வரையில் வெங்காயம் விலை உயரும். அதன் பிறகு குறைந்து நிலையானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.