மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக மாவட்ட தொற்றா நோய்த் தடுப்பு மருத்துவ அலுவலா் கே.விஜயகுமாா் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை பாதிப்பு, கா்ப்பப்பைவாய் புற்றுநோய், காசநோய் உள்பட 10க்கும் முக்கிய பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை, காசநோய் போன்ற தொடா் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியவா்களுக்கு 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது. அதன்படி இதுவரை ரத்த அழுத்த நோயாளிகள் 74,109 பேருக்கும், சா்க்கரை நோயாளிகள் 36, 776 பேருக்கும், ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை இரண்டும் உள்ளவா்கள் 34,177 பேருக்கும், இயன்முறை சிகிச்சை 6,449 பேருக்கும், பிற நோய் பாதிப்புக்கு 6,692 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.