கோவையில் கரோனா தொற்றுக் காரணமாக ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் இரவு நேர புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புத்தாண்டு கொண்டாட்டங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதன் மூலம் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் நபா்கள் மூலம் ஒமைக்ரான் நோய்த் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
எனவே, கோவை மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் டிசம்பா் 31 ஆம் தேதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூட்டம் கூடுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடுபவா்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டம் 2005இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.